Tuesday, March 25, 2008

காதல் பிறந்த கதை

மு.கு: மக்கா, இந்த கதை காதல் கதை. அழுகாச்சி கதை இல்ல. அதுனால தைரியமா படிங்க! ஓகேவா.. அருணாக்கா, சீக்கிரமா கவிதை எழுத கண்டிப்பா முயற்ச்சிக்கின்றேன். ஸ்ரீ நீ கேட்ட சந்தோஷமான முடிவும்!
---------------------------------------------------------------------


என்னைகாச்சும், நமக்கு வாழ்க்கையில நடந்ததை யோசிச்சு, மறந்துபோன முக மனிதர்கள் நியாபகம் வந்து, அவிங்க மேல திடீர்னு காதல் வருமா? எனக்கு அப்படி தான் வந்துச்சு. அட, என்னடா அது நமக்கு மட்டும் ஒரு பிகரும் சிக்க மாட்டேங்கிது அப்படினு, என் வாழ்க்கையில் இதற்கு முன் சந்தித்த பெண்களை எல்லாம் திருப்பி பார்த்து கொண்டிருந்தது என் மனம்.

முதன் முதலா, அட இந்த பொண்ணு அழகா இருக்கா என்று தோன்றிய 8ஆம் வகுப்பு ஸ்ரீவித்யா.. பசங்களும் பொண்ணுகளும் கலந்து உட்கார்ந்த வகுப்பறையில் என்னை வாடா போடா என்று பேசிய என் ஒரே ஸ்கூல் தோழி 6ஆம் வகுப்பு கிருத்திகா (அட.. அதுக்கு பின்னால பன்னி கழுதைனு எல்லாம் சொல்லுவா.. அதெல்லாம் எதுக்கு).. நான் கடன் வாங்கிய ஸ்கேலை தொலைத்து விட்டேன் என என்னை அடித்த 3ஆம் வகுப்பு குண்டு குட்டிப்பெண்.. அவளிடம் இருந்து என்னை காப்பாற்றிய என் 3ஆம் வகுப்பு உயிர் தோழி.. அவள். பெயரும் முகமும் மறந்த போனவள்.

இவளை பற்றி சொல்லியே ஆகனும். நான் அந்த ஸ்கூலில் ஒரே வருடம் படித்திருந்தாலும், புதிதாய் போய் சேர்ந்த இரெண்டாம் நாளே, 'என்ன உன் கிட்ட யாருமே பேசாமாட்டேங்கறாங்களா' என தானாய் வந்து பேசிய பெண். அப்பொழுது முழுகாம இருந்த என் அம்மா தினமும் சாப்பாட்டு எடுத்திட்டு வருவதை பார்த்து, "Aunty, நான் சாப்பட வைக்கின்றேன்.. நீங்க ஏன் தினமும் கஷ்டபடுகிறீர்கள்" என கேட்ட குட்டி தேவதை. நான் ஒரு மாதம் மானிட்டராக இருந்த பொழுது (அட.. Class leader பா.. computer monitor இல்லை) பசங்க பேசறாங்க என டீச்சரிடம் மாட்டி விட, அன்று மதியம் அடிக்க வந்த பசங்களை ஒட ஓட விரட்டி அடித்த வீர மங்கை.

எல்லாவற்றையும் விட, shoe லேஸ் கட்ட தெரியாதா என கிளாஸில் ஒரு டீச்சர், மொத்த வகுப்புக்கு முன்னே கேலி செய்து, அவிழ்ந்த லேஸ் கட்டிகொண்டு பின் வகுப்புக்குள் வா என வெளியே நிறுத்தி விட, நான் பேந்த பேந்த என முழிக்க, பின் நான் அழ ஆரம்பித்ததும், டீச்சர் அனுமதிக்க மறுத்த போதும், பயப்படாமல் எழுந்து வந்து என் shoe lace கட்டி விட்ட ... என் அழகிய தேவதை.

காதல்ல பல வகை உண்டு. ஆண் பெண் சங்கதி எல்லாம் தெரிந்து, இன கவர்ச்சியுடன் கலந்து வருவது மட்டும் காதல் இல்லை. இது வேற மாதிரி. எனக்கு சொல்ல தெரியல. எல்லாமே சொல்லி தான் தெரியனும்னு இல்லை. எப்படி இந்த பெண்ணை இவ்ளோ நாள் மறந்தேன்? அவள் முகம் பெயர் என எதுவுமே நியாபகம் இல்லை.. அவள் எனக்காக செய்தவைகளை தவிற. முகமும் பெயரும் தெரியவில்லை என்றாலும், அவளை பற்றி நினைத்ததும், மனதில் வீசும் அந்த மெல்லிய தென்றலை தவிற... வேறு சுவடே இல்லை.

ஒரு விதை மரமாவதில், எத்தனையோ நீர் துளிகள் தேவைப்படலாம். ஆனால், உயிரற்ற விதையில், உயிர் கலக்கிய அந்த முதல் மழைத்துளி ஆனவள் அவள். என் மனதில்.

இப்படி ஒரு பொண்ணு நியாபகம் வந்தால் எப்படிங்க காதல் வராம இருக்கும்.
'அம்மா.. நான் மூணாவது படிக்கறப்ப, ஒரு பொண்ணு வாசல்ல வந்து உங்க கிட்ட இருந்து லஞ்ச் பேக் வாங்கிட்டு வருவாளே.. அவள் பெயர் என்ன?'
'யாரு பிரியதர்ஷினியா? அவளை பத்தி எதுக்குடா கேட்கிற?'
'ஒன்னும் இல்லை சும்மா தான்..'

சில மாதங்கள் கழித்து, என் அலுவலக family party ஒன்றில்..


'அங்கிள், உங்க லேஸ் அவிழ்ந்து இருக்கு.' ஒரு குட்டிப்பெண் குழந்தை, ஆபிஸ் பார்ட்டியில் என்னிடம் அழைத்து சொன்னாள்.

குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், கொஞ்சம் பேச்சு கொடுத்துக்கொண்டு இருந்தேன்.சற்று நேரம் கழித்து ஒரு அழகிய பெண், அம்மாவாக இருக்கும் போல..
'ஓ இங்க இருக்கியா ஸ்வேதா' என சொல்லிக்கொண்டே வந்தாள்.

என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு, அவளும் பேசினாள்.. பேசிய பின் ஆச்சர்யம். ஆம் நீங்கள் யூகித்தது தான். அவளே தான். ப்ரியதர்ஷினி. என்னை இன்னமும் நியாபகம் வைத்திருந்தாள். மகிழ்ச்சியாய் இருந்தது.


'குழந்தை செம க்யூட்'
சொன்ன ஒரு சில வினாடிகள், என் கண்கள் ஏமாற்றத்தை காட்டின போலும்.
'என் குழந்தை இல்லை. என் அண்ணன் குழந்தை. எனக்கு இனிமே தான் டும் டும் டும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க'
'...'
'இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.

இப்போ சொல்லுங்க.. காதல் பிறந்த கதை தான?

Monday, March 24, 2008

வெண்மேகம் பெண்ணாக..

கேட்டதும் பாடல் பிடிச்சதால, பாட்டும், வரிகளும் இங்க ....
-----------------------------------------------------------------


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே.. (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே)
(வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

(உன்னாலே)

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)


வீடியோவுடனான பாடல்..

Friday, March 21, 2008

கடவுள் இறந்த கதை

P.s: Hi ppl, Was away in a client place with no internet access.. will be visiting ur blogs soon... And BTW, This is just a story....
----------------------------

நான் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் வருடம் அவளை பார்த்தேன். அவள் பெயர் தீபிகா. நன்றாக படிக்கும் மாணவி. உலக அழகியாக இல்லா விட்டாலும், திரும்பி பார்க்க வைக்கும் மென்மையான அழகு. பெண்களுடன் அதிகம் பேசாத எனற்கு, கல்லூரி பஸ்ஸில், கடைசி நிறுத்தம் வரை உடன் வருவதாக பழக்கமானாள். தினமும் ஒரு மணி நேர பேருந்து பயணம். அதில் இறுதி 20 நிமிடங்களான கடைசி நிறுத்ததிற்கு செல்லும் இரண்டே பேர், நாங்கள். அப்படி தான் பழக்கமானாள் தீபிகா. அதிகம் பேசாத பெண் என்று அவளை பற்றி நினைத்து கொண்டிருந்த எனற்கு ஆச்சர்யம். சினிமாவில் இருந்து கிரிக்கெட் வரை சமமாக சளைக்காமல் என்னுடன் பேசிய ஒரே தோழி. கொஞ்சம் நாட்களிலேயே, நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். சில நேரம் அவளை நட்பையும் தாண்டி பிடித்திருக்கின்றதோ என்று கூட யோசித்ததுண்டு.

அப்படியொரு வழக்கமான நாளில் தான், அவள் குடும்பத்தை பற்றி பேச ஆரம்பித்தோம். சினிமா, காதல், கடவுள் என பலவும் பேசிய நாங்கள், எங்கள் பெற்ரோரை பற்றி பேசாதது எனற்கு சற்றே ஆச்சர்யமாக இருந்தது.
'உங்க அப்பா என்னடா செய்யறார்?' அவள்.
'ஓ, அவர், மெடிக்கல் ஷாப் ஒன்று நடத்தி வருகின்றார். he is a Pharmacist" நான்.
'அம்மா?'
'அம்மா, home maker.. ஆமா உங்க அப்பா அம்மா?'
'என் அப்பாவை எனக்கு தெரியாது..'
திகைப்பில் மேற்கொண்டு என்ன கேட்க என தெரியாமல்.. சில வினாடிகள் மௌனம் காத்தேன்.. கனமான மௌனத்தை கலைக்கும் விதமாக அவளே வேறு ஏதோ ஒன்றை பற்றி பேச ஆரம்பித்தாள். இருந்தாலும், அப்பொழுது யாருடன் இருக்கின்றாள், உறவினர்களோடா? அம்மா எங்கு இருக்கின்றார்கள் என மனதில் எழுந்த கேள்விகளை அடக்கி கொண்டேன்.

அறியாமை பேரின்பம். ஆம். உண்மை தான். Blessed is Innocence. And so is ignorance too, at times. தன்னை வளர்த்து வருபவன், ஒரு நாள் வெட்டுவான் என தெரியாததில் தான், கொஞ்சம் மகிழ்ச்சியாவது தங்கும் கசாப்பு கடைக்காரனின் ஆட்டிற்கு. சில உண்மைகள் தெரியாமல் இருப்பது தான் நல்லது.


ஷ்யாம். அவன் தான் காரணம். என் அழகிய அறியாமை கூடு பிய்த்தெறியப்பட.
'என்னடா மச்சான், தினமும் தனியா போறியாம் அந்த பொண்ணோட..'
'ஏன் அதுக்கு என்ன?'
'டேய்.. பொண்ணு யாருன்னு தெரியாதா.. அவங்க அம்மா நம்ம ஊரு..' ரெட்லைட் ஏரியா பெயரை சொல்லி.. 'பயங்கர பாப்புலர்டா.... அம்மாவிற்கு 5000 ரூபாய். பொண்ணுக்கு எவ்வளவு?'
கெட்ட வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, நிற்க பிடிக்காமல்,நகர்ந்தேன்.

அன்று பேருந்து பயணம் கனமாக தொடங்கியது. என் கண்களை படிக்கும் வித்தை கற்று கொண்டாள் போலும்..
'யாரு சொன்னா உன்கிட்ட?' அவள்
'என்ன.... எத..'
'எங்கம்மா பத்தி தான்.. அதான் உன் கண்ணுல தெரியுதே..'
'ஒன்னும் இல்ல.. ம்ம்.. ஆக்ஷ்வலா.. IT dept ஷ்யாம்.'
'ஹ்ம்ம்.. கடவுள் நம்பிக்கை இருக்கா உனக்கு?'
'ம்ம்ம் பின்ன... ஏன்?'
'எனக்கும் இருக்கு.. மனதை விற்கும் மனிதர்களுக்கு நடுவில் உடம்பை விற்பது... வித்தியாசமாக படுகின்றது போலும்.. எல்லாவற்றிர்க்கும் ஒரு காரணம் இருக்குடா. இப்படிபட்ட தேவை இருக்கும் ஆண்கள் இருக்கும் வரை இந்த தொழிலும் இருக்கும். இதனால் தான் குடும்ப பெண்கள் கொஞ்சமாச்சும் நிம்மதியா நடக்க முடியுது இரவினில்..'
'.....'
'....எங்கம்மாக்காக தான்டா நான் படிக்கின்றேன். படிச்சு, ஒரு நல்ல வேலை கிடைச்சிட்டா.. ' சொல்லி முடிக்க முடியாமல் அழ தொடங்கினாள் அவள்.

ஸ்கூல் பேக்கின் மீது கால் பட்டாலே, சரஸ்வதி கோவப்படுவாள் என சொல்லி வளர்க்கப்பட்ட வீட்டில் பிறந்ததாலோ என்னவோ.. அதற்கு பின் என்னையும் அறியாத ஏதொ ஒன்று எங்களுக்குள் ஒரு மெல்லிய இடைவெளியாக வளர்ந்து பெரியதாகி எங்களை பிரித்துப்போனது. மௌனங்களாகவே நீண்டு போனது, அடுத்த ஒரு வருட பேருந்து பயணங்கள்.

என் சோகமான நாட்களில் எல்லாம் மழை பெய்யும். அன்று எழுந்த பொழுது மழை கொட்டிக்கொண்டு இருந்தது. மனிதப்பாவங்களுக்கு எல்லாம் கடவுள் ஒட்டு மொத்தமாக அழ முடிவெடுத்தது போன்றதொரு மழை. தேர்வு இருந்ததால் கல்லூரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். தீபிகா வழக்கம் போல் இல்லாமல், அன்று வராமல் இருந்தது மனதை ஏதோ செய்தது. அதிகம் யோசிக்காமல், கடைசி நேர படிப்பினில் கவனம் செலுத்தினேன். எக்ஸாம் எதிர்பார்த்ததை விட எளிதாக தான் இருந்தது. முடித்து விட்டு வெளியே வரும் பொழுது தான் கவனித்தேன், தீபிகா, எக்ஸாமிற்கு வராமல் போனதை. செம்ஸ்டர் எக்ஸாம் இல்லையென்றாலும் கூட, ரிவிஷன் டெஸ்டிற்க்கும் தவறாமல் வருவாளே என யோசித்து கொண்டு இருந்த பொழுது தான், கேட்டது, சக மாணவிகள் இருவர் பேசிக்கொண்டது.
"ஹேய்.. தீபிகா நேற்று இரவு தற்கொலை செய்ய முயற்சி செய்தாளாம். இப்போ" ஒரு ஹாஸ்பிடல் பெயர் சொல்லி, "அங்கே இருக்கின்றாளாம்"..
கேட்டதும், ஒரு நிமிடம் என் இதய துடிப்புகள் சுதாரித்து மெதுவாய் துடிப்பதாயின. மீதி நாள் மட்டம் போட்டு விட்டு, அவள் இருந்த மருத்துவமனைக்கு கிளம்பினேன்.

"பாவி பொண்ணு.. 20 மாத்திரை போட்டு இருக்கா..." வெளியில் அவள் அம்மா புலம்பிக்கொண்டு இருந்தாள். இதற்கு முன் பார்த்திடா விட்டாலும் முகசாயல் காட்டி கொடுத்தது. அந்தம்மாவின் கண்ணை பார்க்கும் சக்தி இல்லாமல், தீபிகாவை காண உள்ளே சென்றேன். இயந்திரத்துடனும், க்ளுக்கோஸ் ட்ரிப்புடனும் இணைக்கப்பட்டு அவள்.

அவள் கண்கள் மூடிக்கொண்டு இருந்ததால், தூங்குவதாக நினைத்து, அருகில் அமர்ந்தேன்.
"ஏன் டா என்னை இப்போ போய் பார்க்க வந்த.. சாக கூட விடமாட்டேங்கறாங்கடா.."
"தீபிகா..என்ன..ஆச் " சொல்லி முடிக்கும் முன், உதட்டின் மேலும், கன்னங்களின் மேலும் இருந்த கீறல் தழும்புகள் காட்டிக்கொடுத்தன. திடீரென்று பேசமுடியாமல்... நெஞ்சிலிருந்து ஒரு சோக குமிழி வெடிப்பது போலதொரு பிரம்மையில் மௌனமானேன். நான் கவனித்து விட்டதை பார்த்த அவளும் மௌனமானாள். அவள் கைப்பிடித்து வெகுநேரம் அமர்ந்து இருந்தேன். இறுதியாக 'சரி.. கிளம்பறேன் தீபிகா. வீட்டுல கூட சொல்லிட்டு வரலை நான்.. நாளைக்கு வருகின்றேன்...' சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டேன்.
"கடவுள் பொய்டா.." என்று சொன்னாள்...
'தீபிகா.. நான் உன்னை ..'
'ப்ளீஸ்.. ஏதும் சொல்லாத... வேண்டாம்'

அன்று வீட்டிற்கு சென்ற பொழுது, தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு பின் தான் உள்ளே சென்றேன். அன்று இறந்தது என் கடவுள்.


இரெண்டு கடவுள்கள் இறந்து போனது மட்டுமே மனதில் வெறுமையாக, மழை கொட்டி வெறுமையான வானம் போல். கடவுள் மனிதனை படைத்து, உடைக்க, மனிதனும் கடவுளை படைத்து உடைப்பதாகப் பட்டது எனற்கு.


அதற்கு பின் அவளை பார்க்க போகவில்லை.

Saturday, March 15, 2008

காதலும் க்ரைமும்

மு.கு: திரும்பவும் ஒரு கதை முயற்சி செய்யறேன்.. வீட்டுக்கு ஆள் அனுப்பாம, படிச்சு கமெண்ட்ட மட்டும் போடுங்க மக்கா..
---------------------------------------------------------------------

வருடம்: 2020 சூர்யா. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவன். கடந்த 5 வருடங்களாக மிக இரகசியமான ஆராய்ச்சி ஒன்றில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர். அவர் அடைய முயலுவது - சம அண்டத்திற்கு ஒரு திறவுகோல்.. ஆங்கிலத்தில் Portal to a parallel Universe. அதாவது, நம் அண்டத்தை போலவே, எண்ணில் அடங்கா அண்டங்கள் நம்மை சுற்றி, நாம் அறிய முடியாத கோணங்களில் இருப்பதாகவும், நாம், ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும் ஒவ்வொரு நொடியும், ஒரு புதிய அண்டம் உருவாகி அதில் நம்மை போலவே ஒருவன், நாம் எடுக்காமல் விட்ட அந்த முடிவை எடுத்து வாழ்வதாகவும் ஒரு கருத்து உண்டு. அப்படி அண்டங்கள் உண்டு. அந்த அண்டங்களுக்கு பயணிக்க, ஒரு வழி உருவாக்க முடியும் என்றும், அதையே தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டும் வாழ்பவர் இந்த சூர்யா.

இப்போ, கொஞ்சம் ஊதுபத்தி சுத்தி பின்னால போவோம்.. காலத்தில் (ஆமா, இப்படி சீரியஸான கதையில் காமெடி எழுதலாமா வேண்டாமா? சரி.. கழுத இருந்துட்ட போது..)

வருடம்:2000சூர்யா. இஞ்ஜினீயரிங் மாணவன். இறுதி ஆண்டு.

ஒரு பொருள்
இருப்பதை விட
இல்லாமிலிருப்பது
கனமாகாது
எனும் விஞ்ஞானகூற்றை
உடைத்தெறிந்தது..
நீ விட்டு சென்று
போன என் இதயம்..


என்று காதல் கவிதை கிறுக்கி கொண்டு இருக்கும் ஒரு சாதா மாணவன். அவன் காதலிக்கும் பெண்ணின் பெயர் கேட்டால் இராட்சஸி என்று சொல்லுவான். அவளை பார்த்தால், அவளோ தேவதை மாதிரி இருப்பாள். பெயர் அமுதா. இருவரும் நல்ல நண்பர்கள். இவன் காதலை சொல்லி விட்டான். அவளும் சம்மதித்து விட்டாள். காதலர்கள் பிரியும் பொழுது எல்லாம் , சூரியன் சிகப்பாய் விடியுமாம். அன்றும் அப்படி தான் விடிந்தது. சூர்யாவிற்கு தெரியாது, பிரியப்போவது அவன் காதல் தான் என்று. ஒரு ஜீனியர் பெண்ணை கிண்டலடித்த நண்பனுக்காக பேசப்போகி, அது சண்டையாகி, நீ பெண்களை மதிக்காதவன்.. உன்னை போயா நான் காதலித்தேன்.. என்று 3 வருட காதலை வீதியில் பறக்க விட்டு சென்றாள் அமுதா. அவளாய் பேசட்டும் என்று அவனும்.. அவன் பேசட்டும் என்று இவளும் காத்திருக்க, விரிசல் கசப்பாகி, கசப்பு கோபம் சேர்க்க, பிடிவாதத்தில் பிறிந்து போன பல்லாயிர கணக்கான காதல்களில் ஒன்றானது இவர்களதும்.

மீண்டும் வருடம் 2020:இந்தியாவின் தலை சிறந்த குடிமகன் விருதை பெற்ற அவனிடம், நிருபர் கூட்டம்..
"சூர்யா, உங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?"
"காதல்"
"காதலா? உங்களுக்கு தான் கல்யாணமே ஆகவில்லையே?"
"ஆனால் காதலிச்சேன். நடக்கல. அந்த வேகத்தில் காதலிக்க தொடங்கியது தான் இந்த விஞ்ஞானத்தை. அது தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது..
"பிறப்பால் நீங்க ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் தான்.. அப்ப இந்த நிறைவேறாத காதல் தான் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததா?"
பதிலாய் ஒரு மெல்லிய சிரிப்புடன் பேட்டியை முடித்துக்கொண்டான் சூர்யா. (என்ன தான் இந்தியாவின் தலை சிறந்த குடிமகன் விருது எல்லாம் வாங்கினாலும், அவன் படைப்பாளி நாந்தான.. நான் அவன் இவன் என்று பேசலாம் தப்பில்லை!) தமிழகத்தில் எங்கோ ஒரு வீட்டில், அர்ஜீன், கவிதா எனும் இரெண்டு குழந்தைகளுக்கு தாயான அமுதா, தன்னையும் அறியாமல் கண்ணீர் வடித்தாள்..

மற்றொரு நாள்..
"வெற்றி.. வெற்றி.." என சந்தோஷ கூக்குரல் இட்டு, ஒரு பொத்தானை அழுத்தினான் சூர்யா
காற்று லேசானதை போல் ஒரு மெல்லிய படறல்.. அவனை வேறு அண்டத்திற்கு.. அந்த அண்டத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது... சென்னை மாநகரில், ஒரு பிளாட்டில் ஒரு நடத்தர வயது சூர்யாவை அங்கு கண்டான். அவன் மனைவி... அமுதா!!!.
தான் தவற விட்ட வாழ்க்கையை இங்கு நடந்து கொண்டிருப்பதை பார்த்த ஆனந்த கண்ணீர் அவன் கண்களில். கண்ணீர் வற்றியது. பொறாமை பொங்கியது. அழகான இரு குழந்தைகளுக்கு தாயாக, தன் மனைவியாக அமுதா இருப்பதும், வேறு ஒருவன் அவனாய் இருப்பதும் விஞ்ஞானி சூர்யாவிற்கு நெஞ்சை அடைத்தது. கோபத்தில், விஞ்ஞானி சூர்யா, கொலையாளி சூர்யா ஆனான். கொலை செய்த உடலை அவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பிவிட்டு, விஞ்ஞானி சூர்யா சாதாரண சூர்யாவாக மாறினான். தன் வாழ்க்கையில் அன்று வரை கிடைக்காத ஏதோ ஒன்று கிடைத்ததாக நம்பினான். சந்தோஷமாக வாழ தொடங்கினான்..

விஞ்ஞானி சூர்யாவின் உலகத்தில்: 2020
"விஞ்ஞானி சூர்யா தனது வேலையின் பொழுது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார்" என செய்திகள் ஒரு நாள் தலைப்புச் செய்தியாகவும், பின், மக்கள் மறந்த செய்தியாகவும் ஆனது.

(இது ஒரு விஞ்ஞான கதை என படித்து வருபவர்களுக்கு... கதை முற்றும்.. கமெண்ட் போட்டுட்டு, இல்லை கல்ல போட்டுட்டு போலாம்..)

மாற்று சூர்யாவின் உலகத்தில்: 2020
"சூர்யா... உங்களை கைது செய்யறோம்.. நீங்க சூர்யா இல்லை என்பதும், சூர்யாவை கொலை செய்துவிட்டு அவரை போல வந்த வேற்று அண்ட மனிதர் என்பதும் எங்களுக்கு தெரிந்து விட்டது." போலீஸ் தான்...

"எப்படி... " சூர்யா திகைக்க..

சூர்யாவிற்கு தெரியாது. நான் தான் அதை போலீஸிடம் சொல்லி அவரை கைதி செய்ய சொன்னேன் என்று.. என்னதான் நாம உருவாக்கினவங்க என்றாலும், தப்பு செய்தா.. தண்டனை கொடுக்கனும்ல...

டேய்.. அதெப்படிடட நீ சொல்லுவா.. சம்பந்தம் இல்லாம? இதை நாங்க நம்பனுமா? அப்படினு கேட்டீங்கனா....

//ஒரு பொத்தானை அழுத்தினான் சூர்யா
காற்று லேசானதை போல் ஒரு மெல்லிய படறல்.. அவனை வேறு அண்டத்திற்கு.. அந்த அண்டத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது//

இதை எல்லாம் நம்பறீங்க.. இதையும் நம்ப மாட்டீங்களா எனும் ஒரு நப்பாசையில் எழுதிய முடிவு அது என சொல்லி விடை பெறுகின்றேன்.. (அப்ப கேள்விதாள் எங்க என்று கேட்க கூடாது!)

Thursday, March 13, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இன்னைக்கு நம்ம ஷோக்கு அசத்த வருவது... மொக்கை மன்னன், ப்ளேடு பக்கிரி, ஆல்-இன்-ஆல் அழகு ராசா ... யாருன்னு தெரிந்து இருக்குமே... அவர்... அவரே தான்... நம்ம 13ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர்...

இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்..


இவர் சேர்க்கிறது காரு..
தினமும் குடிக்கிறது மோரு.. (அப்படினு சொல்லிட்டு.. ;) )


(இவரு இச்சு அனுபவம்... சொல்லியே ஆகனும்ல..)
இவருக்கு ஆகல இன்னும் மேரேஜ்ஜு.
ஆனா காருக்கு ஆச்சு டேமேஜ்ஜு...


சரி.. பில்ட் அப் போதுமா? மேட்டருக்கு வருவோம்.. (இது மங்களூர் சிவா வீக்கெண்ட் மேட்டரில்லைங்க.. தப்பா நினைச்சுகாதீங்கப்பு)

கோப்ஸ்...
உன் காலுல சீக்கிரம் கட்டனும் ரோப்ஸ்..
(அதான்.. கல்யாணம்... ரொம்ப நாளா புலம்பிட்டு இருக்காரு.. அதான்.. ;) )
அப்படினு வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டு.. இந்த கார உனக்கு பரிசா கொடுத்துக்கின்றேன்..
பாரு.. நீ வருவனு ஒரு வெள்ளை கார அம்மணி வெய்ட்டுங்க்ஸ்...



எல்லாரும் கை தட்டியாச்சா.. ஓகே ஓகே..

எல்லாரும் ஹாப்பி பேர்த் டே கோப்ஸ்... அப்படினு பாடுங்க...
நான் அந்த கொடுமைஎல்லாம் (நீங்க பாடுறத சொன்னேன்..) கேட்க விடாம, கோப்ஸ்க்கு ஒரு ear muffler பரிசாக கொடுத்துட்டு எஸ் ஆகிக்கிறேன்...

வர்ட்டா..

Wednesday, March 12, 2008

ஆதலினால் காதல் செய்வீர்..

மு.கு2: நம்ம சச்சின் கோப்ஸ்க்கும், மருதத்துக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.. அந்த பதிவும் விரைவில் வரும்... வரும்... வரும்...வரும்...

மு.கு: அட எத்தனை நாள் தான் கவிதையெ எழுதறது.. கொஞ்சம் வித்தியாசம் இருக்கட்டுமேனு முயற்சி செய்தேன்.. திட்டாதீங்க... And this is just a story.. இது.. சர்வேசனின்.. "U turn" போட்டி அப்ப எழுத ஆரம்பிச்சது.. அப்ப போட தோணல..



தீபா தன் கல்யாண பத்திரிகையோடும், தோழி காவ்யாவோடும் சென்று கொண்டு இருந்தது, அவளின் காதலன் சூர்யாவின் அறைக்கு. ஆம். சந்தேகம் என்றால் அவள் பத்திரிக்கை படிக்கின்றேன் கேளுங்கள்.. அடுத்த மாதம் 25 ஆம் தேதி அவளுக்கும் ரமேஷ்க்கும் கல்யாணம் என பத்திரிகை சொல்கின்றது!

காவ்யா வெளியே காத்து இருக்க, தீபா உள்ளே சென்றால்.

.......
"சூர்யா, என்னை மன்னித்து விடுடா.. என்னால எங்க அப்பா அம்மா பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாதுடா.. புரிஞ்சிகோடா pls"....

"தீபா.. இது காதல்... இப்படி எல்லாம் தெரிஞ்சு தான நீ காதலிச்ச..இப்ப ஏன் என்னை விட்டுட்டு போற? நீ இல்லாம .. .. ஏன்டி இப்படி பண்ணற?"

"டேய்.. இது காதல்.. எல்லாம் சரி தான். ஆனா எங்க அம்மா அப்பாவா இல்ல இந்த காதலானு யோசிச்சா எனக்கு அம்மா அப்பா தான் டா வேணும். நிஜமா..உன் கூட வந்துட்டாலும், எனக்கு என் அம்மா அப்பாவை விட்டு கூட்டிட்டு வந்துட்டான்னு உன் மேல என் வாழ்நாள் முழுதா கோபம் இருக்கும்.. அது போக அவங்க சாபத்துல எல்லாம் நாம சந்தோஷமாகவும் இருக்க முடியாது.."

"தீபா.. தீபா.. காதல்.. இது.. கத்திரிகாய் இல்ல, அம்மா வேணாம்னு சொல்லிடாங்க.. அப்படி இப்படின்னு.. நீ இல்லாம நானும் நான் இல்லாம நீயும் சந்தோஷமா இருப்போமா? இரெண்டு வருஷமா காதலிச்சோமே.. அப்ப அது எல்லாம் பொய்யா? என்னை எப்பவும் விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னியே.. அது பொய்யா? நீ.. நான்..நாம.. நம்ம காதலே பொய்யா?"

"சூர்யா எத்தனை முறை உனக்கு சொல்றது.. நீ ஒரு மாதமா இதையே சொல்லற.. புரிஞ்சுகோடா.. உனக்கு என்ன?.. நான்தான வேணும்.. இந்தா என்னை இப்பவே எடுத்துக்கோ.. ஆனா இதுக்கு மேல மறந்திடு.." துப்பட்டாவை இழுக்க அது கீழே விழுந்தது....

பளார் என்று கன்னத்தில் அடித்து விட்டு.. அவள் கண்களை ஒரு முறை பார்த்தான் சூர்யா.."
'ஓரெழுத்து பொய் நீ
ஈரெழுத்து பொய் நான்..
மூன்றெழுத்து பொய் நம்ம..
நான்கெழுத்து பொய் காதல்..'
அப்படிங்கிறது சரியாதான்டி இருக்கு.. " சொல்லிக்கொண்டே அவள் துப்பட்டாவை எடுத்து மேலே போர்த்தி விட்டு வெளியில் வேகமாக நடந்தான் சூர்யா..

இதை எல்லாம் வெளியில் நின்றி கேட்டு கொண்டு இருந்த காவ்யா...உள்ளே வந்தாள்.. "என்னடி.. அவன் கிட்ட போய் இப்படி சொல்லற? உனக்கு அடுத்த மாதம் கல்யாணம்.. அவன் எதாச்சும் பண்ணி இருந்தான்னா?" இது காவ்யா..

"ஹேய் அவனை பத்தி எனக்கு தெரியும்.. சரியான sentiment லூசு.. இப்படி எல்லாம் ஏதாச்சும் செய்தால் தான் விட்டுட்டு போவான்.. ஆமா ஒரே காலேஜ்.. இரெண்டு வருஷமா காதலிச்சோம்.. பையன் வேலையும் பண்ணறான்.. மாதம் 6000 ரூபாய் சம்பளம் வாங்கிறான்.. அதுல எல்லாம் சென்னைல இவன் கூட வாழ பத்துமா? இவன் கூட போய் நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்? அப்பா பார்த்து இருக்கும் பையன்.. US ல வேலை பாக்கிறான்.. மாதம், ஒரு லட்சம் சம்பளம்.. அவனை விட்டுட்டு காதல், கத்திரிகாய்னு இவன் கூட வர நான் என்ன கேனைச்சியா?"

அடித்ததை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்க வாசலில் நின்ற சூர்யா காதில் இது விழ உறைந்தான்.. காதலில் சாதல் இது தானோ?

தீபாவும் காவ்யாவும், பத்திரிக்கையை கட்டிலின் மேல் வைத்து விட்டு கிளம்பினார்கள்.. திரும்ப போகும் வழியில்..
காவ்யா தீபாவிடம்.. "ஏன்டி.. அவன் வரும் சத்தம் தான் கேட்டுதே.. அப்புறம் ஏன் அப்படி பேசின?"
"இல்லனா அவன் என்னை மறக்க மாட்டான்டி.. ரொம்ப நல்லவன்டி அவன்.. இப்ப அவனுக்கும் என் மேல வெறுப்பு வந்து.. வேற பொண்ண ரொம்ப கஷ்டபடாம கல்யாணம் பண்ணிப்பான் .. அதாண்டி அ.." சொல்லி முடிக்காமலே அடக்கி வைத்திருந்த அழுகையில் வாய் பொத்தி அழத்தொடங்கிய தீபாவின் மனசுக்குள்
"சபாஷ் தீபா.. ஒரே கல்லுல இரெண்டு மாங்காய்.. அவனையும் நம்ப வைச்சு கழட்டி விட்டாச்சு.. இவ கிட்டயும் நல்ல பேர் எடுத்தாச்சு.." ... சிரித்துக்கொண்டாள்.

காதல் ஜெயிக்கிறதா? தோற்கின்றதா..
முற்றும்.. விடைகள் இல்லாமல்.

Monday, March 10, 2008

ஒரு துளி மௌனம்..


உன் வீதியெல்லாம்
பூத்திருக்க..
எங்கோ பூத்த
ஒற்றை ரோஜா முள்
கீறியதற்கு
என் பூக்களை எல்லாம்
பிய்த்தெறிய சொல்வதின்
நியாயம் என்ன?

விண்ணெழுந்து
ஒன்று கூடி
இடி முழங்கி
மின்னல் வெட்டும்
என் கோபமெல்லாம்
கலைந்து போகின்றது
வெண்மேகமாய்
உன் முன்னால்..

எத்தனையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..

Saturday, March 01, 2008

கவிதைகளின் கவிதை (அழகிய கவிதை IV)

மு.கு: இதற்கு முந்தைய கவிதை பதிவுகள்
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே

குட்மார்னிங்..
உன்னை மாலை
பார்க்கும் பொழுது
சொன்னேன்..

"இப்ப குட்ஈவினிங் டா"
சிரிக்கிறாய் நீ..

உன்னை பார்க்கும்
பொழுது தான்
என் நாட்கள் விடியுமடி..
அப்படியானால்..
குட்மார்னிங் தானே...



ய்..
எனற்கு
ஒரு முத்தம் கொடுடி...

சீ... போடா..

எத்தணை முறை
கேட்டாலும்..
அள்ள அள்ள குறையாத
பேரூற்று போல...
உன் வெட்கம் மட்டும்.
இன்னும்
எவ்வளவு ஆழத்தில் முத்தம்?



"ன்னால
பத்து நிமிஷம் தான்
பேச முடியும்டா"
சொல்லிவிட்டு
நீ சென்றுவிட்டாய்..

அப்பொழுது ஆரம்பித்த
சண்டை...

நீ வந்து பேசும்
அந்த பத்து நிமிடங்களாக
தாம் இருந்திருக்க கூடாதா
என்று
சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன..
என் நாளின்
மீதி எல்லா பத்து நிமிடங்களும்.



தினமும் பிரியும் பொழுது
சண்டை போடுகின்றோம்..

அப்படியாவது
சில கணங்கள்
நீயின்றி வாழலாம்
என நினைக்கின்றேன் நான்..

மெதுவாக தான் புரிந்தது..
நடுப்பகலில்
வீட்டுக்குள் தாளிட்டு
ஒளிந்து கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு நீ என...



"னி உங்களை
நீ வா போ..
என சொல்வதில்லை.."
நீ..

ஏன் தீடிரென்று அந்நியம்
என எனற்க்குள் எழும்
கோபமெல்லாவற்றையும்..

"..என்னங்க.. கோபமில்லையே.."
என கொன்றும் விடுகின்றாய்!



"னிமே எனக்கு
முத்தம் கொடுக்காதீங்க.."
கோபமாய் நீ..

"ஏன்? பிடிக்கவில்லையா?"
சந்தேகமாய் நான்...

முத்தத்தால்..
மனதில் வரும்
பக்க விளைவுகளில்
படிக்க முடிவதில்லை..

அடிப்பாதகி..
என் ஒற்றை முத்தத்திற்கே..
இப்படி சொல்கின்றாயே..
மொத்தமாய் என மனதிற்குள்
குதித்து நீ ஆடும் ஆட்டத்திற்கு
நான் என்ன சொல்ல?



காத்திருத்தல் தவம் என்றால்
காதல் வரம்..

இதயம் கோவில் என்றால்
அதில் நீ கர்ப்பகம்..

சிற்பம் கலை என்றால்
நீ அதற்கு உயிர் தரும் தேவதை...

இத்தணையும் கவிதை என்றால்
நீ கவிதைகளின் கவிதை